Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து கடந்த 33 நாட்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசுக்கு எதிராக நம்மாழ்வார் பாசறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தலைமையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போராட்ட குழுவினர், இந்த போராட்டம் இரண்டாம் உலக போராக கருதுகிறோம். மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தவுள்ளோம். அடுத்தடுத்த போராட்டங்களில் குடும்பத்துடனும், கால்நடைகளுடனும் போராட்டத்தில் கலந்து கொள்வோம் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் மத்திய, மாநில அரசிற்கு எதிராக எதிர்ப்புகளை காட்டும் வண்ணம் கோஷங்களை எழுப்பினர். இதில் தாழாண்மை உழவர் இயக்கம், காவிரி உரிமை மீட்பு குழு, கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஒன்றிய நகர, நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்க பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.